சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...
புரிதல் என்னவெனில்,
இயற்கை இட்டுவைத்த
காலப் புள்ளிகள்
ஒருபோதும் 'முற்று' பெறா...-மாறாய்
அவையாவும் 'இயக்கப் புள்ளிகள்'....
ஒருகால் அவை 'முற்று' பெறின்
இயக்கம் 'முற்று' பெறும்.
இயக்கம் 'முற்று' பெறின்
இயற்கை ஏது?-ஆயினும்
இங்கே
எனக்கென்று 'புள்ளி'
எதுவும் உண்டா?-உண்டு...
உயிர்களனைத்திற்கும்
ஒரே புள்ளி-'தொடர்ச்சிப்புள்ளி'
காலம் கணித்த
எல்லை வரை
நாம்
தொடர்ச்சிப்புள்ளிகளாய்த்
'தொடரவே' வேண்டும்...
பின்தொடர்வது 'இயற்கை'...
அதிடுவதே நமக்கு 'முற்று'...
ஆம்...
புரிதல் புலப்படுகின்றது
நன்றாய்...
இந்நாட்களில்
நான் வைத்துக்கொள்வது
தொடர்ச்சிப்புள்ளியே....
அன்பு,நட்பு,
கல்வி,காதல்,
உழைப்பு,உயர்வு,
மனிதம்,மாண்புவென
அனைத்திற்கும்...அனைத்திற்கும்
நான்
வைப்பது 'தொடர்ச்சிப்புள்ளியே'...
மீண்டும் மீண்டும்
வைத்துக் கொள்கின்றேன்...
மழை,வெயில்,
இரவு,பகல்,
நிமிடம்,நேரம் என
அனைத்துமே
'தொடர்ச்சிப் புள்ளிகளாய்'...
எதற்காக
'முற்றுப்புள்ளி'?...
சில நாட்களின் நகர்தலில்
சின்னதாய் ஒரு புரிதல்...
Thursday, July 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment