Friday, June 25, 2010

'டேய் முருகா- ரெண்டு போடவா'...

அரசு இடைநிலைப்பள்ளி
வெளிப்புற வகுப்பு
மாலை மணி 4.30

'ஒரு கனசதுரத்தின் பரப்பு காண......

டேய் முருகா...
ஒழுங்கா முட்டிப் போடுறியா-இல்ல
ஒன் முதுகுல ரெண்டு போடவா'...


'வேணா டீச்சர்.....

சாமி...-இந்த
சுமதி டீச்சர் வாயி-இன்னிக்குமா
சூத்திரம் போடணும்...

நாளைக்கு என்ன நாளு...
எல்லாரும் புதுத்துணி வாங்கிட்டாங்க...
எவ்ளோ பெரிய வெடில்லாம் வாங்கிட்டாங்க...

எனக்கு இன்னும்
எதுவும் இல்ல...

ஆத்தாகிட்டக் கேட்டா
அடிக்கவருது ஆத்தா...
அப்பாகிட்டக் கேட்டா
குடிச்சுட்டுவருது அப்பா'...


'டேய் முருகா- ரெண்டு போடவா'...


'வேணா டீச்சர்...

சாமி...-இந்த
வீட்டு மணிய
வெரசா அடிக்கச்சொல்லு...

கடத்தெருக்குப் போலாமுனு
காலைலயே சொல்லுச்சு ஆத்தா...

வெரசாப் போவணும்..
வெரசாப் போவணும்...

புதுத்துணி வாங்கணும்...
புல்லட்டு வெடி வாங்கணும்...
சங்குச்சக்கரம்,புசுவானம்...-ஆத்தாடி
எவ்ளோ வாங்கணும்'...


'டேய் முருகா- ரெண்டு போடவா'...


'வேணா டீச்சர்...

சாமி...-இந்த
வீட்டு மணிய
வெரசா அடி...

முக்கோணச் சூத்திரம்
சொல்ல மறந்து
முட்டிப் போடுறேன்
முக்காமணி நேரமா...

என் நெனப்பெல்லாம் கடத்தெருல...
என்கிட்டப்போயி
வட்டஞ் சதுரம்னா எப்புடில...
எம்மா நேரமா காத்துட்டுருக்கேன்- இந்த
வீட்டு மணிய எவனாச்சும் அடிங்கள...


'டேய் முருகா- ரெண்டு போடவா'


'வேணா டீச்சர்'....

No comments:

Post a Comment