அன்றொரு நாள்
ஏதோ மயக்கத்தில்
நீ
சிந்திவிட்ட முதற்முத்தத்தை
இதழில் வாங்கி
சிதறாமல் வைத்துக்கொண்டேன்-என்
நாடி நரம்பினில்
ஏற்றிக்கொண்டேன்-உன்
காதலை
இறுகக் கவ்விக்கொண்டேன்-அன்று
புதிதாய்
பிறந்தும் கொண்டேன்...
நாட்கள் சற்று
நின்றே மறைந்தன...
மழையாய்...வெயிலாய்...
இசையாய்...தென்றலாய்...
கனவாய்...நனவாய்...
நிழலாய்...உயிராய்...
அனைத்துமாய் உன்னை
அள்ளிக்கொண்டேன்...
கிடைத்தப்பொழுதில்
அளந்துக்கொண்டேன்...
சற்றே கண்ணயர்ந்தேன்...
விண்ணுக்குள் புகுந்துவிட்டாய்...
உன்
கல்லறையின் ஓரமாய்
நிமிடந்தோறும்
உடைந்து பிறக்கின்றேன்...
சிதைந்து இறக்கின்றேன்...
ஒன்றுமேயில்லையடி..
இன்று நான்
எதுவுமாயில்லையடி...
மரண மயக்கம்
விரைந்து வரும்-அன்று
நான்
மயங்கி நிற்பேன்...
நீ
விட்டுச்சென்ற
முதற்முத்தம்
என்னிதழில்
கலங்கி நிற்கும்...
உன்னிதழ் தந்து
எடுத்துக்கொள்...
தடையின்றி
மரணிக்கத் துவங்கிடுவேன்...
Monday, September 26, 2011
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment